"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, April 4, 2016

ALTERNATIVE MEDICINE




நோக்கு வர்ம செயல்பாடு!

 ,


நோக்கு வர்மம் மேலும் சில தகவல்கள்!         Labels:

நோக்கு வர்மம் என்பது நான்கு வகையான வர்ம பிரிவுகளில் ஒன்று என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம். இந்த நோக்கு வர்மத்திற்கு "மெய்தீண்டாக் கலை" என்றொரு பெயரும் உண்டு. தவிர்க்க இயலாத ஆபத்துக் காலங்களில் மட்டுமே இந்தக் கலையினை பயன்படுத்திட வேண்டும் என சித்தர் பெருமக்கள். வலியுறுத்தியிருக்கின்றனர்.

நம்மை தாக்க வரும் மனிதர்கள் அல்லது விலங்குகளின் மீது பார்வையைச் செலுத்துவதன் மூலம் அவர்களை செயலிழக்கச் செய்து நம்மை தற்காத்துக் கொள்வதே இந்த கலையின் அடிப்படை நோக்கம். மேலும் குறைந்த இடைவெளியில் உள்ளவர்கள் மீது மட்டுமே இந்த முறையினைப் பயன்படுத்தி செயலிழக்கச் செய்யமுடியும். நுட்பமான இந்த கலையில் தேர்ந்தவன் எவராலும் வெல்ல முடியாதவனாகி விடுவான் என்கிறார் அகத்தியர். இதன் பொருட்டே குருவானவர் இந்தக் கலையை அத்தனை எளிதில் தம் மாணவருக்கு அருளிட மாட்டாராம்.

ஒரு வேளை மாணவன் வர்மக்கலையை முழுவதுமாக கற்றுத் தேர்ந்த பின்னர், காலப்போக்கில் அகந்தை காரணமாய், தன்னையே எதிர்க்க துவங்கினால் என்ன செய்வது என்று தயக்கத்தின் காரணமாய், குருவானவர் இது போன்ற சில நுட்பமான வர்மங்களை தங்கள் பரம்பரைக்கு என்று வைத்துக் கொண்டு மற்றவற்றையே கற்று கொடுத்தமையும் இந்த கலையின் அழிவிற்கு இன்னுமொரு காரணமாகிறது.

இன்றும் கூட, நம்முடைய பேச்சு வழக்கில் உள்ள "கண் திருஷ்டி", "கண்படுதல்", "கெட்டபார்வை", "ஒரு பார்வையில் சப்த நாடியும் ஒடுங்கிப் போதல்" என்பது மாதிரியான வார்த்தை பிரயோகங்கள் பயன் பாட்டில் இருப்பதை கவனிக்க வேண்டுகிறேன். இவற்றை நோக்கு வர்மத்தின் நீட்சியாகவோ அல்லது எச்சங்களாகவே கருதலாம்.

நமது இந்த மெய் தீண்டாக் கலையே சீனாவில் போதி தர்மர் என்னும் பௌத்த துறவியினால் போதிக்கப் பெற்றது . இந்த நோக்கு வர்மத்தை தற்போது சீனாவில் "திம்-மாக்" என அழைக்கின்றனர். இது பற்றிய மேலதிக விவரங்களை இந்த இணைப்பில் காணலாம்.

இது போலவே வர்மத்தின் மருவிய தோற்றமே ஜப்பானிய தற்காப்புக் கலையான "அக்கிடோ" என்றும் கூறுகின்றனர். அக்கிடோ பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் அறியலாம்.

இப்படி ஆசிய நாடுகள் எங்கும் பரவிய கலையின் தாயகம் தமிழகம். இது தமிழர்களின் கலை, ஆனால் இன்று ஏறத்தாழ தமிழர்கள் அனைவராலும் மறக்கப் பட்டுவிட்ட அல்லது தமிழகத்தில் அழிந்தே போய்விட்ட கலை இது. இன்றைக்கு நமக்கு பழம் பெருமை மட்டுமே மிச்சமாயிருக்கிறது. இது மிகவும் வருந்தத் தக்க நிலை. இந்த நிலையிலாவது நம்மிடம் இருக்கும் தகவல்களைக் கொண்டு இந்தக் கலையினை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் களமிறங்கிட வேண்டும்.

நோக்கு வர்மம் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது?, நோக்கு வர்மப் புள்ளிகள் எவை? நோக்கு வர்மத்தால் என்ன செய்ய முடியும்?..... இந்த விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.





நோக்கு வர்மம்.... சில அடிப்படைகள்!

 Labels:
நோக்கு வர்மம். தீபாவளி நாளில் இருந்துதான் இந்த வார்த்தை பிரபலமாகி இருக்கிறது. அதற்கு முன்னர் வரை இப்படியான ஒன்றைப் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திக்க வாய்ப்பில்லை. இத்தனைக்கும் இது நம்முடைய அடையாளம், குறைந்த பட்சம் இப்படியான தகவல்கள், திரைப்பட ஊடகம் மூலமாவது தமிழர் பார்வைக்கு வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது. தமிழன் தன் பார்வையையும் கூட ஆயுதமாக உணர்ந்து அறிந்து பயன்படுத்தியிருக்கிறான் என்பதே பெருமிதமான உணர்வுதானே!.

இப்படித்தான் தமிழரின் அநேக பெருமைகள் மறைவாகவே இருக்கின்றன. அவை தாமாய் மறைந்ததா இல்லை மறைக்கப் பட்டதா என்று ஆராயப் புகுந்தால் தேவையில்லாத வீண் மன கசப்புகளே மிஞ்சும்.

நோக்கு வர்மம் என்பது அடிப்படையில் வர்மங்களின் வகைகளில் ஒன்று. இதைப் பற்றிய அறிமுகம் மற்றும் விளக்கத்தினை ஏற்கனவே ஒரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன். அதன் விவரங்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். இந்த முறை வர்மம் பற்றி அகத்தியர், போகர் போன்ற பெருமக்கள் தங்களின் நூல்களில் விளக்கிக் கூறியிருக்கின்றனர்.

ஒரு சிலர் நமது நோக்கு வர்மம் மேல் நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் கலைகளுக்கு இணையானதா என்ற கேள்விவியினை மின்னஞ்சல்களில் முன் வைத்திருக்கின்றனர். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் இரண்டும் வெவ்வேறான அடிப்படையைக் கொண்டவை என்றே கருதுகிறேன். இதற்கு இவற்றின் அடிப்படைகளை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்பவரால் பிரபலமானதால் இதற்கு மெஸ்மரிசம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் போன்ற கலைகள் பற்றி திரைப்படங்கள், கதைகள் மிகையான ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன என்பதே உண்மை. நிதர்சனத்தில் இந்த ஊடகங்கள் காட்சிப் படுத்துவதைப் போல நினைத்த மாத்திரத்தில் ஒருவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே முடியாது. ஏனெனில் இந்த முறையில் ஒருவரை இயக்க விரும்புபவர் அவர் அனுமதி இன்றி நிச்சயமாக அதைச் செய்திட முடியாது.

அவர் அனுமதி பெற்ற பின்னர் "அறிதுயில் நிலைக்கு" அவரை கொண்டு சென்று அதன் பின்னர் அவர் ஆழ்மனதிற்குள் ஊடுருவி அவரை கட்டுப்பாடிற்குள் கொண்டுவர வேண்டும். அதிலும் அறிதுயில் நிலைக்கு செல்பவர் யாருக்கும் எக்காரணம் கொண்டும் சொல்ல கூடாது அல்லது தெரியகூடாது என்று தீர்மானமாக இருக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாது.

இங்கு அறி துயில் என்பது கேட்டல், பேசுதல், தொடுகை போன்ற உணர்வுகளுடன் கூடிய ஒருவகை உறக்க நிலை.

இந்த ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் போன்ற கலைகளால் ஒருவரிடம் இருக்கும் மன அழுத்தம், கவலைகள், தீய பழக்கவழக்கங்கள், குற்ற உணர்ச்சி போன்றவற்றை இல்லாது செய்யலாம் அது தவிர அவரின் கடந்தகால வாழ்க்கை சம்பவங்கள். முற்பிறப்பு நினைவுகள் வரை அறியலாம் என்று கூறப்படுகிறது.

மாறாக நோக்கு வர்மம் என்பது நொடிப் பொழுதில், நினைத்த மாத்திரத்தில் பார்வையாலேயே எதிரியை வீழ்த்தவோ அல்லது தன் முன்னாலிருக்கும் ஒருவரை தனது முழுக் கட்டுப்பாடிற்குள் கொண்டுவரவோ முடியும். இது மிகையான வாதமாக இருக்க முடியாது. ஏனெனில் இது பற்றி அகத்தியரும், போகரும் உறுதியான கருத்துக்களையே தங்களின் நூலில் கூறியிருக்கின்றனர்.

எல்லோரும் நினைப்பதைப் போல இந்த கலை அடியோடு அழிந்து போய் விட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன். இன்றும் கூட இந்த கலையின் எச்சங்கள் நம்மிடையே இருந்து கொண்டுதானிருக்கின்றன. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.






மருத்துவ வர்மம்....

  Labels: , ,
வர்மக் கலையானது அடிப்படையில் மருத்துவம் சார்ந்த ஒன்று என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாகவும், அவற்றின் ஊடே பத்து வகையான வாயுக்களின் ஓட்டம் இருப்பதாகவும் சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர்.

அவை முறையே...

பிராணன் - உயிர்க்காற்று
அபாணன் - மலக் காற்று
வியானன் - தொழிற்காற்று
உதானன் - ஒலிக்காற்று
சமானன் - நிரவுக்காற்று
நாகன் - விழிக்காற்று
கூர்மன் - இமைக்காற்று
கிருகரன் - தும்மற் காற்று
தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
தனஞ்செயன் - வீங்கல் காற்று

என்பதாக வரையறுத்திருக்கின்றன. இந்த நாடிகள் ஒன்றோடு ஒன்று இனையும் அல்லது பினையும் இடங்களை நாடிமுடிச்சுகள் என்கின்றனர். இந்த இடங்களில் இந்த வாயுக்கள் தேங்கியிருக்குமாம். இவற்றை நாடி பார்த்து அறிந்து விட முடியும் என்றும், அதனை பார்க்கும் முறைகளையும் அகத்தியர் அருளியிருக்கிறார்.

இந்த நாடி முடிச்சுகளையே வர்மப் புள்ளிகள் என்கின்றனர். இந்த புள்ளிகளை அழுத்துவதன் மூலமோ, அல்லது தட்டுவதன் மூலமோ இந்த வாயுக்களின் ஓட்டத்தினை சீரமைக்க முடியும் என்பதே வர்மக் கலையின் அடிப்படையாக புரியப் படுகிறது. இந்த வர்மங்களின் வகைகளை ஏற்கனவே முந்தைய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன். தேவையுள்ளோர் இந்த இணைப்பில் அந்த பதிவுகளை பார்வையிடலாம்.

இன்றைய மருத்துவத்தில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமெனில் அவரை மயக்க நிலைக்கு ஆழ்த்தியோ அல்லது வலி தெரியாமலிருக்கும் மருந்துகளைக் கொடுத்தோ சிகிச்சை செய்கிறோம். இதற்கென பிரத்தியேக மருந்துகள் இப்போது உள்ளன. ஆனால் வர்மக் கலையில் உடலில் ஒரு சில புள்ளிகளைத் தட்டுவதன் மூலமே ஒருவரை மயக்க நிலைக்கு ஆழ்த்தவும், குறிப்பிட்ட பாகத்தினை மரத்துப் போகச் செய்யவும் முடியும்.

சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் சில குறிப்பிட்ட இடங்களைத் தட்டுவதன் மூலம் மூர்ச்சையை தெளிய வைக்கவும், மரத்துப் போன இடத்தில் உணர்வினை மீட்டெடுக்கவும் முடியும். இந்த அடிப்படையே பின்னாளில் தற்காப்புக் கலையாகவும், உயிர் கொல்லும் போர்கலையாகவும் மாறியது.

இவைதவிர ஆயுதங்களால் வெட்டுபடுவதாலோ அல்லது வேறு வழிமுறைகளாலோ உடலில் கயமேற்பட்டு இரத்தம் அதிகமாக வெறியேறினால் அந்த இரத்தப் போக்கினை உடனடியாக நிறுத்தவும் வர்மக்கலை வழி சொல்கிறது. இதனை அகத்தியர் இவ்வாறு விளக்கியிருக்கிறார்.

காயமது திருமேனிதனில்
ஆயுதங்களின் அடவால் வெட்டுண்டு
குருதியது வெளிப்போந்தாக்கால்
குருதியதை நிறுத்தும் உபாயமது
உத்தமனே உரைப்பேன் கேளு
கரமதின் கவளிகளது பிளவுண்டு
குருதி கண்டால் மணிக்கட்டுதனில் பற்றிய
மணி பந்த சூட்சுமமதில் பெருவிரலது

கொண்டு அழுத்தி மனதினில்
நூற்று எண்பது மாத்திரை அதை
எண்ணி விரலகற்ற குருதியது
அடங்கும் அடங்கு மடாபரி தொன்று
அறிந்து கொள்ளடா மணிகட்டதுமுதல்
முண்டது காண் பகுதிதனில்
வெட்டுண்டு இருதியது வருங்கால்
பதறாதே பய்ய வேமுண்டது உள்

வர்மநிலை தனில் ஆட்காட்டியதால்
மாத்திரை அரை யூன்றியே பூரணமாய்
நூற்று இருபத்து எண்ணியே விரலகற்ற
குருதியது தானெனவே நிற்கும்பாரு
பாரெனவே சிரசதனில் குருதியது
பெருக்கம் கண்டால் சென்னிபற்றிய
செவிக்குத்தி கால மதில் ஆட்காட்டியதில்
மாத்திரையது காலளவு வழுத்தி

அகவினில் எண்ணமது இரு நூற்று
நாற்பது தாமதித்து விரலகற்றிட
சுகம்தானே சுகமாய்தானே
மற்றொன்று கேளாய் மகனே
அதரமது அருகில் தானடா சுழிவர்மம்
சுண்டு அன்னம் முகவாய் தனில்
குருதி காண் சுழியதில் விரலுன்றி
மாத்திரையது கால் வரையறுத்து

உள்மனதினில் அறுபது எண்ணமிட
குருதியது சேதமிடல் தட்டென
நிற்கு மடா ஊட்டமான ஊட்டியதனில்
வெட்டுண்டு குருதியது கொட்டுங்கால்
குறியானது குரல் முடக்கியதில்
விரல்களது ஊன்றியே பாங்காய்
பரிவுடனே மாத்திரையது அரைதான்
வழுத்தி நவமணி முறை பூஜ்யமதில்

எண்ணிட இரத்த மது சுகமாய் நிற்ககுமடா
கரமது வெட்டுண்டு இரத்தப்
போக்கால் அவதி கண்டால்
மற்றொரு உபாயமது கூறுவேன்
கேளாய் மகனே கம்கூட்டது
சேருமிட சேர்க்கையதில் விரலூன்றி
சுகமாய் அழுத்திட உதிரப்போக்கது
தீரும்பாரு திடமான கால்களதில்

ஊனது தோன்றி குருதியது நீர் போன்று
வெளியேறி னாக்கால் தயவான
நெறி வர்மமது இருபுறமும் பற்றிட
குருதியது தானென நிற்கும் பாரு
நின்றெனவே முழங்காலதின்
கீழ்தானடா ஆயுதமதால் தாக்கமது
கண்டால் நடுத்தொடை சூட்சுமத்தில்
திறனாய் அழுத்திட குருதியது

நிற்கும் பாரு பாரெனவே இரத்தப்
பெருக்கத்தை நிறுத்த இறுதியான
வர்மசூட்சுமம் இது தானடா மைந்தா
பாதமது இணையும் காலது பொருத்துதனில்
பற்றிய வர்மமதில் பெருவிரலால்
தட்டெனவே அழுத்திட குருதியது
சீரென சினராமல் நிற்குமடா

- அகத்தியர்.

சமீபத்தில் விபத்தில் காயமடைந்து குருதி கொட்டக் கொட்ட கொண்டு வரப்பட்ட இரண்டு பேரின் குருதிப் போக்கினை இந்த முறையினால் உடனடியாக என்னால் நிறுத்திட முடிந்தது. இப்படியான அவசர நேரங்களில் வர்மம் போலொரு சிறந்த மருத்துவமுறை இருக்க முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.

இவை தவிர பல்வேறு நோய்க் குறியீடுகளை அறியவும், அவற்றிற்கான சிகிச்சை முறைகளையும் அகத்தியர் தனது நூலில் விவரித்திருக்கிறார். நேரமும், குருவருளும் அனுமதித்தால் எதிர் காலத்தில் அவை பற்றி விரிவாக பதிவிட முயற்சிக்கிறேன்.

இனி, எல்லோரும் மிக ஆவலும் எதிர்பார்த்திருக்கும் நோக்கு வர்மம் பாக்கி இருக்கிறது. அதென்ன நோக்கு வர்மம்?. இப்போது அதை பயன்பாட்டில் இருக்கிறதா? நோக்கு வர்மத்தால் என்ன செய்யலாம்?, என்ன செய்ய முடியும்?

இந்த கேள்விகளுக்கான பதிலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.






வர்மம் மர்மமா?

 Labels: ,

வர்மக் கலை என்பது அடிப்படையில் ஒரு மருத்துவக் கலை. ஆனால் கால ஓட்டத்தில் தற்காப்பு கலையாக உருமாற்றம் பெற்று, தற்போது வர்மக்கலை ஒரு நுட்பமான போர்க் கலை என்பதாக திரைப் படத் துறையினர் மூலம் வெளிக்காட்டப் பட்டிருக்கிறது. மறைந்து போயிருந்த இந்த கலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பலரின் ஆர்வத்தை இந்தக் கலையின் பக்கம் திருப்பியவர்கள் என்கிற வகையில், அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்களே.

நமது உடலானது எலும்புகளாலும், தசைகளாலும், நரம்புகளாலும் பின்னப் பட்டிருக்கிறது. இதில் ஒரு உறுப்பானது மற்ற உறுப்புடன் எவ்வாறு பிணைக்கப் பட்டிருக்கிறது, அவைகள் பிணைக்கப் பட்டிருக்கும் தொழில் நுட்பம் எத்தகையது என்பதை நவீன அறிவியலில் கதிரொளி (xray) மற்றும் வருடி (scan) மூலமாக நாம் பார்க்க முடிகிறது. அதனை வைத்தே சேதமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட ஒரு உறுப்பிற்குத் தேவையான சிகிச்சைகள் தரப்படுகின்றன.

இத்தகைய அறிவியல் வளர்ச்சி இல்லாத ஒரு காலகட்டத்தில், மேலே குறிப்பிட்ட நவீன முறைகளை விடவும் நேர்த்தியான, செலவில்லாத ஒரு வைத்திய முறையாக வர்மக் கலை விளங்கியிருக்கிறது என்பது நமக்கு கிடைத்திருக்கும் நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த தகவல்கள் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. பல அரிய நூல்கள் அழிந்து போயிருக்கலாம், அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம் என்றே கருதத் தோன்றுகிறது.

தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் வர்ம நூல்கள்...

ஒடிவு முறிவு சாரி
வர்ம சூத்திரம்
வர்ம கண்ணாடி
வர்ம காண்டம்
வர்ம பீரங்கி
வர்ம சூடாமணி

இந்த கலை அழிந்து போனதற்கும் இந்த கலையின் சிறப்பே கூட ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். ஏனெனில் இந்தக் கலையில் தேர்ந்த ஒருவன் சகல விதத்திலும் தன் சக மனிதர்களை விட அசாத்திய திறமைகளைக் கொண்டவனாகி விடுகிறான். அப்படிப் பட்டவனால் எதனையும் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.

ஒரு வேளை ஆசாபாசங்களில் சிக்கியிருக்கும் தவறான மனிதர்கள் கையில் இந்த கலை சிக்கி அவர்கள் தங்கள் சுயநலத்திற்கு பயன் படுத்த ஆரம்பித்தால் அது சமூகத்தில் ஆபத்தான விளைவுகளையும், முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தி விடும் என்று கருதியே, சரியான மாணவன் கிடைத்தால் மட்டுமே கற்றுத் தருகிற கலையாகிப் போனது. சரியான மாணவன் கிடைக்காவிட்டால் அந்த குருவோடு அந்த கலை அழிந்து போக வேண்டியதுதான்.

பலரும் நினைப்பதைப் போல இந்த கலையினை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சித்தர்கள் வகுத்திருக்கின்றனர். போகர் ஒரு பாடலில் சீடனை தெரிந்தெடுக்கும் வகையினை இப்படிச் சொல்கிறார்.

"மறைவில் வைப்பதென்றால் மைந்தா கேளு
வகைவிபரம் கைபாகம் மறைப்பொன் றில்லை
உறவாடிச் சிலபேர்கள் நூல் தாவென்று
ஓவியம் போல் மொழிபேசி உன்னை மேய்ப்பார்
திறமான நூலவற்கு வெளியிடாதே
சீடனென்று பன்னிரண்டு வருடம் காத்தால்
அறிவான பக்தியவர்க் கிருந்த தானால்
அப்பனே நிலையறிந்து நூலை ஈயே"

- போகர்.

குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் ஒருவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவரது தகுதியினை சோதித்து அறிந்த பின்னரே அவருக்கு இந்த கலையினை கற்றுக் கொடுக்க வேண்டுமென கூறுகிறார். சரியான மாணவனைக் கண்டறிந்த உடனும் அவருக்கு இந்தக் கலையினை போதிக்க முடியாது. இந்தக் கலையினை ஏற்றுக் கொள்ளும் உடல் மற்றும் மனப் பக்குவத்தை பெறுவதற்கான பயிற்சிகளே முதலில் வழங்கப் படும். அவற்றில் தேறினால் மட்டுமே குருவானவர் வர்மக் கலையினை மாணவருக்கு அருளுவார். இதெல்லாம் இன்றைய அவசர உலகத்துக்கு சாத்தியமாகுமா?

ஆக, பொறுமை, நிதானம், தீர்க்கமான சிந்தனை, பிற உயிர்களின் மீது அன்பும், கருணையும் செலுத்தும் மனிதாபிமான பாங்கு போன்ற இயல்புகள் மிளிரப் பெற்றவரே இந்தக் கலையை கற்றுக் கொள்ளும் தகுதியுடையவராவார். இவர்களுக்கு மட்டுமே இந்த கலை முழுமையாக போதிக்கப் படுமாம். அவர்கள் நடவடிக்கையில் எள்ளளவு சந்தேகம் வந்தாலும் குருவானவர் முழுமையாக கற்றுத் தராமல் போகும் வாய்ப்புள்ளது.

பதிவின் நீளம் கருதி வர்மக் கலையின் மருத்துவப் பயன்பாடு மற்றும் நோக்கு வர்மம் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.





வர்மம் - தோற்றமும், காலமும்!

 Labels: , , ,
கடந்த ஐந்தாறு நாட்களாய் தினமும் குறைந்தது பத்திருபது மின்னஞ்சல்களாவது நோக்குவர்மம் பற்றிய விசாரிப்புகளுடன் வந்திருக்கின்றது. எல்லாம் கடந்த தீபாவளி அன்று வெளியான "ஏழாம் அறிவு" திரைப் படத்தின் விளைவுதான். வர்மம் பற்றியும், அதன் வகைகள், முறைகள், செயல்பாடுகள் பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அவற்றை வாசித்தறியலாம்.

  • இருப்பினும் தொடர்ச்சியான வேண்டுகோள்களின் காரணமாய் வர்மம் பற்றிய மேலதிக தகவல்களை இந்த தொடரில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த தொடரினை கடந்த வாரமே வலையேற்றி இருந்தால் பரபரப்பான வாசிப்புக்கு உள்ளாகி இருக்கும். எனினும் ஏற்கனவே கடந்த வாரத்திற்கான பதிவுகளை முன்னரே வலையேற்றி விட்டபடியால் ஒரு வாரம் தாழ்த்தி இந்த தொடரை வலையேற்றுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் காத்திருந்து வாசிப்பார்கள்தானே!

வர்மக் கலையினை ஆதி குருவான சிவனே தோற்றுவித்ததாக சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் பதிவு செய்திருக்கின்றனர். அவர் தனது இணையான சக்திக்கு இந்த கலையை உபதேசித்தாகவும், அவரிடம் இருந்து நந்தி தேவர் வழியே தனக்கு கிடைத்தாக அகத்தியர் தனது பாடல்களில் கூறியிருக்கிறார்.

இதனை அகத்தியர் தனது "ஒடிவு முறிவு சாரி" என்னும் நூலில் பின்வருமாறு சொல்கிறார்.

"பாதிமதி யணிபரமன் தேவிக்கிசைய
பணிவுடனே தேவியிடம் நந்தீசர்வாங்கி
மகிழ்வாக எந்தனக்கு சொன்னாரப்பா
வேதனை வாராமல் வர்மசூக்குமம்
விபரமுடன் உந்தனுக்கு உரைக்கக்கேளே"

- அகத்தியர்.

போகரும் தனது "போகர் வர்மசூத்திரம்" என்னும் நூலில் சிவன் அம்மைக்கு சொல்ல தாயான ஈஸ்வரி நந்திக்கு சொல்ல நந்தி தனக்கு சொன்னதாக சொல்கிறார்.

"தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல
பரிவுடனே நந்திசொன்ன மார்க்கம்
பாடினேன் வர்மசூத்திரம் பண்பாய்தானே"

- போகர்.

போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் தனது "வர்ம காண்டம்" என்னும் நூலில் இது பற்றி பின்வருமாறு சொல்கிறார்.

"பதாரம்தனைப் பணிந்து வர்மகாண்டம்
பாடினேன் நாடிநரம்பு ஆனவாறும்
காதாரம் கொண்டுணர்ந்து என்னைஆண்ட
கடாட்சமது போகருட கருணை யாலே
வளமாகப் புலிப்பாணி பாடினேனே"

- புலிப்பாணி.

இந்த தகவல்களின் அடிப்படையில் ஆதிசிவன் இதனை உருவாக்கியிருந்தாலும், நந்தி தேவரின் வழியேதான் அவரது சீடர்கள் இந்த கலையினை கற்றுத் தேர்ந்திருப்பது தெளிவாகிறது. நந்தி தேவரின் காலம் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த வர்மக் கலை பற்றி பல்வேறு விதமான செவிவழிக் கதைகள் இருக்கின்றன. அவற்றின் நம்பகத் தன்மை கேள்விக்குரியது. எனினும் புராண இதிகாசங்களில் இந்த வர்மக் கலை பற்றி நேரடியான/மறைவான தகவல்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் பீமசேனன் துரியோதனின் தொடையில் கதையால் அடித்துக் கொன்றதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

முன்னாளில் வர்மக் கலையானது தமிழர்களின் வாழ்வியல் கலையாகவும், குருமுகமாய் எவரும் பயிலக் கூடியதாக இருந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழர்களின் மீது அன்னியர்களின் ஆதிக்கம் உருவான போது இந்த கலை மறைவாகவும், இரகசியமாகவும் வைக்கப் பட்டு, கால ஓட்டத்தில் அழிந்தே போய்விட்டது என்று சொன்னால் மிகையில்லை.

இன்று இந்தக் கலையை நமக்குச் சொல்லக் கூடிய நூல்கள் மிகவும் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அவை பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.






அதி ஆபத்தான வர்ம முறைகள்..!

 Labels: ,
வர்மக்கலையினை மனித சமூகத்தின் ஆக்கத்திற்கும் பயன் படுத்தலாம், அழிவிற்கும் பயன்படுத்திடலாம்.இதன் பொருட்டே இந்தக் கலை காலம் காலமாய் நம்பகமான சிலருக்கு மட்டுமே வழிவழியாய் பயிற்றுவிக்கப் பட்டு வந்தது. தகுதியானவர்கள் கிடைக்காத பட்சத்தில் இந்த தொடர் சங்கிலி அறுந்து போகும் .இப்படியாக பல அரிய விஷயங்களை நாம் இழந்துவிட்டோம் என்பது வேதனையான உண்மை. இன்றைக்கு நம்மிடையே எஞ்சியிருப்பதையாவது பாதுகாத்திட வாய்ப்புள்ள அனைவரும் முயற்சித்திட வேண்டும்.

சங்குதிரி கால வர்மம்

"சரளமான சங்கத்தின் ஒருவிரல் கடை
உள்தள்ளி நின்ற வர்மமடா
இதனில் தாக்கமது நிகழ்ந்தால்
ஓலமிட ஓசையது எழாது
எழாமலே இருவிழியது அந்தக்
காரமது சூழ்ந்து தெறித்து
இருமலது தோன்றி மயக்கமுமாகுமே"

- அகத்தியர் -

இந்த வர்மமானது குரல்வளையின் குரல் நாண் மடிப்பு உள்ள இடத்தில் அதாவது குரல் வளையின் நடுவில் கழுத்துச் சங்கின் இருபுரமும் உள்ளது. இந்த வர்மப் புள்ளியில் தாக்கப்பட்டால் குரல்வளையின் இருபுறமும் உள்ள வலது , இடது நாண்கள் சேதமடைந்து குரல்வளைக்குச் செல்லும் காற்றானது தனது இயல்பு அதிர்வுகளை ஏற்படுத்த முடியாது தடுக்கப் படும் இதனால் தாக்கப்பட்டவர்களால் உடனடியாகப் பேசமுடியாமல் போய் கண்கள் இருண்டு மயக்கமடைவார்கள்.


தட்சணக் கால வர்மம்...

"போகுமடா மைந்தா வெள்ளையது
உள்ளங்கையில் பொருந்திநின்ற
தட்சணைக் காலம் சொல்வேன்
ஆகுமடாஇந்தவர்மம் கொண்டால்கேளு
உயிரது பிரியும் நேரமாகும் புண்ணியனே
மாத்திரையது மீறிரைக்கால் மரணமாகும்"

- அகத்தியர் -

நமது உள்ளங்கையின் நடுவிலிருந்து சற்று மேலே விரல்களை நாபிப் பிடித்தால் ஆள்காட்டி விரலுக்கு அடுத்தவிரலான கட்டை விரல் எந்த இடத்தில் நிலைத்திருக்கின்றதோ அந்த இடமே தட்சணக் கால வர்மப் புள்ளியாகும். இந்த வர்மத்தில் முக்கால் மாத்திரையோ அல்லது முழு மாத்திரை அளவோ தாக்கப்படுமானால் தாக்குதலுக்கு உள்ளாபவர் மரணமடைவார்..இந்தத் தட்சணக் கால வர்மத் தாக்குதலை இனி இயலாது என்கிற இறுதிக்கட்டதிலேயே பயன்படுத்த வேண்டும்...

இந்த பதிவில் தரப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் தகவல் பகிர்வே, தயவு செய்து எவ்ற்றையும் பரிட்சித்து துன்பமடைய வேண்டாம். தக்க வாய்ப்பும், குருவருளும் கிடைக்கப் பெற்றவர்கள் கற்றறிந்து மனிதகுல மேன்மைக்கு பயன்படுத்திடுங்க்ள்.

அடுத்த பதிவில் உடலுக்கு நலமும்,பலமும் நல்கும் தேக முத்திரைகளைப் பற்றி பார்ப்போம்.



எதிரியை செயலிழக்க வைக்கும் வர்ம முறைகள்!

 Labels: ,
தவிர்க்க இயலாத சூழலில் தன்னை காத்துக் கொள்ளும் பொருட்டு எதிரியை செயலிழக்க வைக்கும் சில வர்ம முறைகளை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். முறையாக கற்றவர்களால் மட்டுமே இவற்றைப் பயன் படுத்த முடியும், எனவே யாரும் இவற்றை முயற்சிக்கவோ, பரிட்சிக்கவோ வேண்டாம். நமது முன்னோர்களின் அருமை, பெருமைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக, தகவலாக மட்டுமே எடுத்துக் கொண்டிட வேண்டுகிறேன்.

தட வர்மம்

"மைந்தா அங்குலம் நாலின்கீழே
செயலான பெருவிரல் இடையில்தானே
பய்யவே தடவர்மம் அதற்க்குப் பேரு
பாங்காய்ச் சுவடது பதித்த வலுவுடனே
அல்லது களியாலோ குத்தினிக்கால்
தடவர்மம் தட்டென உயர்ந்து
பாங்காய் ரத்தமது கட்டிக் கொண்டு
உய்யவே உளைச்சலது காணும்"

- அகத்தியர் -

நமது கால் பெருவிரலுக்கும் அதற்க்கு அடுத்த விரலுக்கும் நடுவில் இருக்கும் சதைப் பிடிப்பான பகுதியில்தான் தட வர்மப் புள்ளி இருக்கிறது. இந்த வர்ம இடத்தில் காலின் பின் குதியாலொ அல்லது சிலம்பின் முனையாலோ தாக்குவதால் அந்த இடம் வீங்கி, இரத்தம் கட்டிக்கொள்வதுடன் உடல் முலுதும் பயங்கர உளைச்சலைக் கொடுக்கும். இதனால் பதில் தாக்குதல் தாக்க எதிரியால் முடியாது போய்விடும்.


முடக்கு வர்மம்

"பாரப்பா முட்டியது பின் நேர் பற்றிய
வர்மமடா முடக்கு இதன்
பெயர்தானே இதனில் தாக்கம்
கண்டால் காலது மடங்காதடா
சக்தி இழந்து திமிர் போலாகி
விறைக்குமடா மைந்தா
மாத்திரையது மீறினாக்கால்
நிரந்தர முடவனாவான் பாரே"

- அகத்தியர் -

இந்த வர்மப் புள்ளியானது காலின் முட்டிக்கு நேரே பின்புறத்தில், அதாவது கால் மடக்குமிடத்தில் உள்ளது. இந்த இடத்தில் அடிபட்டால் அடிபட்ட இடம் வீங்குவதுடன், அந்த இடத்தில் அதிக வலியும் ஏற்படும், இந்த வர்மா புள்ளியில் அடிபடுவதால் அந்த இடத்தின் தசை விறைப்படையும் அதனால் காலை மடக்க முடியாத நிலை ஏற்படும். அந்த வர்மத்தில் முழு மாத்திரை அளவு அடி பட்டால் அடிபட்டவன் வாழ்நாள் முழுதும் அந்தக் காலால் நடக்க முடியாத முடவன் ஆகிவிடுவான் என்கிறார்.

நாளைய பதிவில் மேலும் அதி ஆபத்தான இரண்டு வர்ம முறைகளைப் பற்றி பார்ப்போம்.

முக்கிய வர்மங்கள்

 Labels: ,
உடலில் உள்ள சில முக்கிய வர்மப் புள்ளிகள்...

தலைப்பகுதியில் உள்ள வர்மங்கள்...37

திலர்த வர்மம்
கண்ணாடி கால வர்மம்
மூர்த்தி கால வர்மம்
அந்தம் வர்மம்
தும்மிக் கால வர்மம்
பின் சுவாதி வர்மம்
கும்பிடு கால வர்மம்
நட்சத்திர வர்மம்
பால வர்மம்
மேல் கரடி வர்மம்
முன் சுவாதி வர்மம்
நெம வர்மம்
மந்திர கால வர்மம்
பின் வட்டிக் கால வர்மம்
காம்பூதி கால வர்மம்
உள்நாக்கு கால வர்மம்
ஓட்டு வர்மம்
சென்னி வர்மம்
பொய்கைக் கால வர்மம்
அலவாடி வர்மம்
மூக்கடைக்கி கால வர்மம்
கும்பேரிக் கால வர்மம்
நாசிக் கால வர்மம்
வெட்டு வர்மம்
அண்ணாங்கு கால வர்மம்
உறக்க கால வர்மம்
கொக்கி வர்மம்
சங்குதிரி கால வர்மம்
செவிக்குத்தி கால வர்மம்
கொம்பு வர்மம்
சுமைக்கால வர்மம்
தலைப்பாகை வர்மம்
பூட்டெல்லு வர்மம்
மூர்த்தி அடக்க வர்மம்
பிடரி கால வர்மம்
பொச்சை வர்மம்
சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...13

தள்ளல் நடுக்குழி வர்மம்
திவளைக் கால வர்மம்
கைபுஜ மூன்றாவது வரி வர்மம்
சுழி ஆடி வர்மம்
அடப்பக்கால வர்மம்
முண்டெல்லு வர்மம்
பெரிய அஸ்தி சுருக்கி வர்மம்
சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்
ஆனந்த வாசு கால வர்மம்
கதிர் வர்மம்
கதிர் காம வர்மம்
கூம்பு வர்மம்
ஹனுமார் வர்மம்

உடலின் முன் பகுதியில் உள்ள வர்மங்கள்..15

உதிர்க் கால வர்மம்
பள்ளை வர்மம்
மூத்திர கால வர்மம்
குத்து வர்மம்
நேர் வர்மம்
உறுமி கால வர்மம்
ஆமென்ற வர்மம்
தண்டு வர்மம்
லிங்க வர்மம்
ஆண்ட கால வர்மம்
தாலிக வர்மம்
கல்லடைக் கால வர்மம்
காக்கடை கால வர்மம்
புஜ வர்மம்
விதனு மான் வர்மம்

முதுக்குப் பகுதியில் உள்ள வர்மங்கள்...10

மேல் சுருக்கி வர்மம்
கைக்குழி காந்தாரி வர்மம்
மேல்க்கைப் பூட்டு வர்மம்
கைச் சிப்பு எலும்பு வர்மம்
பூணூல் கால வர்மம்
வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
கச்சை வர்மம்
கூச்ச பிரம்ம வர்மம்
சங்கு திரி கால வர்மம்
வலம்புரி இடம்புரி வர்மம்

கைகளில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...9

வலம்புரி இடம்புரி வர்மம்
தல்லை அடக்க வர்மம்
துதிக்கை வர்மம்
தட்சணக் கால வர்மம்
சுழுக்கு வர்மம்
மூட்டு வர்மம்
மொளியின் வர்மம்
கைக்குசத்திட வர்மம்
உள்ளங்கை வெள்ளை வர்மம்

கைகளில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...8

தொங்கு சதை வர்மம்
மணி பந்த வர்மம்
திண்டோதரி வர்மம்
நடுக்கவளி வர்மம்
சுண்டு விரல் கவளி வர்மம்
மேல் மணிக்கட்டு வர்மம்
விஷ மணி பந்த வர்மம்
கவளி வர்மம்

கால்களில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...19

முதிர கால வர்மம்
பத்தக்களை வர்மம்
ஆமைக்கால வர்மம்
பக்க வர்மம்
குழச்சி முடிச்சி வர்மம்
சிறுவிரல் கவளி வர்மம்
சிரட்டை வர்மம்
கால் மூட்டு வர்மம்
காலக் கண்ணு வர்மம்
நாய்த் தலை வர்மம்
குதிரை முக வர்மம்
கும்பேறி வர்மம்
கண்ணு வர்மம்
கோணச்சன்னி வர்மம்
கால வர்மம்
தட வர்மம்
கண் புகழ் வர்மம்
அனகால வர்மம்
பூமிக் கால வர்மம்

கால்களில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...13

இடுப்பு வர்மம்
கிழிமேக வர்மம்
இழிப் பிழை வர்மம்
அணி வர்மம்
கோச்சு வர்மம்
முடக்கு வர்மம்
குளிர்ச்சை வர்மம்
குசத்திட வர்மம்
உப்புக் குத்தி வர்மம்
பாதச் சக்கர வர்மம்
கீழ் சுழி வர்மம்
பதக்கல வர்மம்
முண்டக வர்மம்

பின் முதுகுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...8

மேல் சுருக்கு வர்மம்
மேலாக கால வர்மம்
கீழாக கால வர்மம்
தட்டேல்லு வர்மம்
மேலஅண்ட வர்மம்
நாயிருப்பு வர்மம்
கீழ் அண்ட வர்மம்
குத்திக் கால வர்மம்

இவையே உடலின் முக்கிய வர்மப் புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்..

நாளைய பதிவில் வர்மங்கள் சிலவற்றை செய்திடும் முறையினை காண்போம்.





வர்மங்களின் வகைகள்..!

 Labels: ,
வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார்.இவை "படு வர்மம்","தொடு வர்மம்","தட்டு வர்மம்","நோக்கு வர்மம்"

படுவர்மம்

நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார்.

தொடு வர்மம்

இதுவும் படுவர்மத்தைப் போலவே பலமாக தாக்கப்படுவதன் மூலமே ஏற்படுகின்றது. ஆயினும் இது படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது என்கிறார். இந்த முறைகளை எளிதில் குணப்படுத்த இயலும் என்றும் கூறுகிறார்.

தட்டு வர்மம்

ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தில் தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாதவாறு மிகமிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதே தட்டுவர்மம் ஆகும்.

நோக்கு வர்மம்

பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே நோக்கு வர்மம் எனப்படும். இந்த வர்ம முறையும் ஆபத்தானது என்று குறிப்பிடும் அகத்தியர், நோக்கு வர்ம முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.

இவை தவிர, உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகளையும் விரிவாக பட்டியலிட்டிருக்கிறார், அதன் படி...

தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவரங்களை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.





யார் வர்மம் பழகலாம்...!

 Labels: ,
வர்மக் கலையினை குருமுகமாய் பயில்வதே சிறப்பு, நமக்குக் கிடைத்திருக்கும் நூல்கள் எல்லாமே ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்கும். அவை ஒருபோதும் முழுமையான கல்வியாகாது. மரபு வழிசார்ந்த இந்த கலையில் அனுபவமும், விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சி மட்டுமே ஒருவனை வித்தகனாக ஆக்கும்.

வர்மக் கலையில் தேர்ந்த வைத்தியர்கள் மிகச் சிலரே நம்மிடையே இருக்கின்றனர். இவர்களும் பெரிதான அளவில் வெளியில் தெரியாமல் தங்களை நாடி வருவோருக்கு மட்டும் வைத்தியம் செய்திடும் இயல்பினர்.குருமுகமாக வித்தையை கைகொண்ட எவரும் விளமப்ர வெளிச்சத்திற்கு ஆசைப் படுவதில்லை. அகத்தியர் கூறியுள்ள தகுதியின் படி வர்மம் பழகிட சில அடிப்படையான குண இயல்புகளும், மனோ ரீதியான கட்டுப் பாடுகளும் தேவை.

எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் நுண்ணறிவும், சேவை மனப்பாங்கும்,ஆகக் கூடிய நிதானமும், பதட்டமோ, கோபப் படும் தன்மை அற்றவனாக இருத்தலே அடிப்படை தகுதியாகும் என்கிறார் அகத்தியர்.மேலும் இத்தகையவர்கள் எதிரிகளை தாக்கும் நோக்குடன் கற்றுக் கொள்ளாமல் மக்களின் நோய் நொடிகளைக் குணப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு பயிலவேண்டும்.

இவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரும் தருணம் அன்றி வேறு எந்த நேரத்திலும் மற்றவர்கள் மீது இதை பிரயோகிக்காது இருத்தல் வேண்டும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் கூட, எதிரியின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாதவண்ணம் எதிரியை தாக்கி வீழ்த்தவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

தேர்ந்த வர்மக் கலை நிபுனன் ஒருவன் எத்தகைய பலசாலியையும் ஒன்றிரண்டு தாக்குதலில் நிலை குலையவைத்து வீழ்த்திட் முடியும். குறிப்பிட்ட சில வர்ம புள்ளிகளை தாக்குவதன் மூலம், எதிரியின் மரண தினத்தைக் கூட நிர்ணயிக்க முடியும். அத்தகைய மரணம் மிகவும் கொடியதும், வலி மிகுந்ததுமாக இருக்குமாம்.

இத்தகைய மகத்துவம் வாய்ந்த வர்மக் கலையினை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்திருக்கிறார். அவையாவன...

படு வர்மம்

தொடு வர்மம்

தட்டு வர்மம்

நோக்கு வர்மம்

இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இந்த வகைகளின் விளக்கங்களையும், அதன் பயன்களையும் நாளைய பதிவில் காண்போம்.




மருத்துவக் கலை!, மரணக் கலை!

 Labels: ,
சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம்.இதனை மர்மம் என்றும் சிலர் அழைப்பது உண்டு.போர் க்கலையில் இந்த முறையினை "நரம்படி" என்று அழைக்கின்றனர்.

பஞ்ச பூதங்களின் கலவையான நமது உடலானது பேசிகள், நரம்புகள் ஆகியவற்றால் பின்னி பினைக்கப் பட்டிருக்கிறது.இப்படி இவை ஒன்றோடு ஒன்றாக பின்னிக் கிட்க்கும் இடங்களை "உயிர் நிலைகள்" என்கிறார்கள்.இவ்வாறு மனித உடலில் 108 உயிர் நிலைகள் இருப்பதாகவும், அந்த உயிர் நிலைகளை முறையாக கையாளுவதன் மூலம் ஒருவரின் உடலை வலிமையாக்கவும், வலுவிழந்து செயலற்றுப் போகவும் வைக்கும் மிக் நுட்பமான கலைதான் வர்மக் கலை.

தமிழர்களின் கலையான வர்மக் கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.சித்த மருத்துவம் தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் வர்மங்கள் பற்றிய நூல்கள் இருக்கிறது.இத்தகைய சிறப்புகளைக் கொண்ட வர்மக் கலை பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"அண்ணலே உலகத்தில் வாழும் மாந்தர்
காயமுறு விழுதலாலும் விண்ணடியில்
பிணையற்று விழ்தலும் விழுந்தநீசி
சிதறி துண்டங்கே வையனாலும்
மண்ணதிலே வெகுநாளாய் துக்கமுற்று
மாளவே வர்மமது கொள்ளலாலும்
திண்ணமுடன் இவைகளிலே பலதுக்காக
செப்புகிற யெண்ணையொரு கியாய மாத்திரை"

- அகத்தியர் -

வர்மக் கலை பற்றி சித்தர்கள் பலர் கூறியிருந்தாலும், அகத்தியர் அருளிய "ஒடிவுமுறிவுசாரி" என்ற் நூலே மிக முக்கியமானதாக க்ருதப் படுகிறது. இந்த அரிய நூல் இன்று மிகச் சிலரிடதேதான் இருக்கிற்து. இன்றைய தேர்ந்த நரம்பியல் வைத்தியர்களுக்கே புரியாத அல்லது தெரியாத பல நுட்பங்களை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது நூலில் துல்லியமாகவும், விரிவாகவும் விளக்கியிருக்கிறார்.

உயிர் நிலைகளில் ஏற்படும் பிசகல், முறிவு, அடிகள் போன்றவை பற்றியும்,அவற்றால் அடையும் பாதிப்புகளையும், அவற்றின் அறிகுறிகளையும் இவற்றை நிவர்த்திக்க தேவையான சிகிச்சை பற்றியும் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சில உயிர்நிலைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சைகள் இல்லையென்றும் குறிப்பிடுகிறார்.மேலும் இந்த சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளான கசாயம், தைலம், சூரணம், மெழுகு போன்றவற்றை தயாரிக்கும் முறைகளையும், பயன்படுத்தும் முறைகளும் இந்த நூலில் விளக்கப் பட்டிருக்கிற்து.