"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Wednesday, May 11, 2016

எலும்பு அரிப்பு நோய்க்கு ஏற்ற மருந்துகள்!



எலும்பு அரிப்பு நோய்க்கு ஏற்ற மருந்துகள்!

இன்று மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்கொல்லி நோய் 'எலும்பு அரிப்பு நோய்'. நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகையுள்ள இந்தியாவில் நாற்பது சதவீத பெண்கள், மாதவிடாய் நின்றபின் எலும்பு அரிப்பு நோய் ஏற்பட்டு அதனால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்போதே பொதுச் சுகாதார அமைப்புகளும் மருத்துவர்களும் போர்க்கால அடிப்படையில் இந்நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்ளாவிட்டால் நம் அடுத்த தலைமுறையினரில் மூன்றில் ஒரு பங்கினர் ஊனமுற்ற நிலைக்கு தள்ளப்படுவர் என்பது அதிர்ச்சித் தரும் தகவலாகும். இந்நோயினால் எலும்பு முறிவதும் சகஜமாகிவிடும்; எலும்புகள் வலுவிழக்கவும் செய்யும்!

பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கும். ஆனால், மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்பு திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக் கொண்டு வருவதில்லை. எலும்புகளில் எலும்பு அரிப்பு ஏற்பட்டு அது பலவீனமாக இருக்கும்போது நாம் பலமாக இருமினால் கூட அது, எலும்பு முறிவை ஏற்படுத்தும். பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படும் மார்பகப் புற்று நோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட 'எலும்பு அரிப்பு நோய்' தான் மிக அதிக அளவில் ஏற்படுகிறது என்பதும் அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரமாகும். இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பு அரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறார். ஆண்களைவிட பெண்கள் இந்நோயால் பாதிப்படையக் காரணம், பெண்களுக்கு ஆண்களை விட எலும்புத் தசைகள் குறைவு என்பதுதான். மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலவீனம் அடைவதும் முக்கிய காரணமாகும்.

பெண்களுக்கு 35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும் மொத்த எடையும் ஒரே சீராக இருக்கும். அதன் பிறகு ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும்பு அரிப்பின் துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்றபின் எடையில் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகுசுலபமாக ஏற்படுகிறது.

ஆண்களுக்கு இந்த எலும்பு அரிப்பு விகிதம் பெண்களுடையது போல் இல்லை. ஆண்கள் 70 வயதிற்கு மேல்தான் இந்நிலையை எதிர்கொள்கின்றனர். பொதுவாக பெண்களை விட ஆண்களின் எலுமபுத் திசுக்கள் வலிமையாகவும், உறுதியாகவும், அளவில் அதிகமாகவும் உள்ளன. இதற்கு காரணம் அவர்களின் உடற்பயிற்சியோடு கூடிய தினசரி வாழ்க்கை முறையாகும். சதவீத அடிப்படையில் சொல்வதானால் எலும்பு அரிப்பு நோய் 80 சதவீதம் பெண்களுக்கும், 20 சதவீதம் ஆண்களுக்கும் வருகிறது.

நம் எலும்புகள் கல் போன்று உறுதியானது என்று நினைக்கிறார்கள். ஆனால் இது தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் எலும்பு மென்மைப் பட்டு, வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது. இது போன்ற எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய கட்டாயமும், இயல்பு நிலைக்கு வராமல் அவதியுறும் தன்மையும் ஏற்படுகிறது. எலும்பு அரிப்பு முதுகெலும்பில் ஏற்பட்டால் சாதாரணமாகக் குனியும்போதுகூட எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். சாதாரண சுளுக்கும் கூட எலும்பு முறிவுக்கு காரணமாகி விடும். இது தீமைகளுக்கு அடிகோல்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு 'ஈஸ்ட்ரோஜன்' அளவு குறைவதும் எலும்பு அரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருக்குமேயானால் அது எலும்பு அரிப்பு நோயையும், அதன் தொல்லைகளையும் தவிர்க்க உதவும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும் சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமன்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை. கிராமப்புறங்களில் உள்ளப் பெண்கள் பல குழந்தைகளைப் பெறுவதால் மாதவிலக்கு நிற்கும் முன்னே அவர்கள் எலும்பு அரிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மாதவிலக்கு நிற்கும் காலம் வரும் போது 'ஈஸ்ட்ரோஜன்' குறைபாடு ஏற்படுவதால் அதுவும் எலும்பு அரிப்பு நோய்க்கு ஏதுவாகிறது. இக்காலத்தில் பெண்களுக்குச் சுண்ணாம்புச் சத்தும், ஈஸ்ட்ரோஜனும் மருத்துவரின் மேற்பார்வையில் செலுத்தப்பட வேண்டும் என்பது அதி முக்கியமானது.

எலும்பு அரிப்பு நோயின் வெளிப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் இன்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் பெண்களுக்கு நாளையே கூட எலும்பு அரிப்பு நோய் ஏற்பட்டு அதன் காரணமாக எலும்பு முறிவும் ஏற்படலாம். எக்ஸ்ரே கூட, நோய் முற்றிய நிலையில் தான் அதை துல்லியமாக காண்பிக்கும். B.M.T. சோதனைகள் மூலம் எலும்புகளில் உள்ள தாது உப்புகள், எலும்பின் எடை பற்றி துல்லியமாக அறியலாம். ஒரு முறை எலும்பு அரிப்பு நோய் வந்துவிட்டால் மேற்கொண்டு அந்த நோய் தீவிரமடையாமல் தடுக்க சில மருந்துகள் உதவும்.

நோயைத் தடுக்கும் முறை:

நடை பயிற்சி சிறந்த பலனை அளிக்கும். ஆல்கஹால், சிகரெட் பிடிப்பது போன்றவற்றை அறவே நிறுத்த வேண்டும். உணவில் கால்ஷியம், வைட்டமின்-டி சரியான அளவில் இருக்க வேண்டும். பெண்களுக்குப் போதிய உடற்பயிற்சி அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களும், நீண்ட நாள் தடைபட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் அந்த கோளாறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறைவால் பெண்களுக்கு எலும்பு அரிப்பு நோய் ஏற்படுவது போல, TESTOSTERONE அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பு அரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம். ஆண்டுதோறும் இந்நோய் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் அச்சுறுத்தி வருகின்றன. அதிகம் விழிப்புணர்வு இல்லாத இந்த காலத்தில், மக்கள் தொகைப் பெருக்கத்தில், வியாதிகள் பெருக்கத்தில், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில், சுய பச்சாதாபம் என்ற ஆட்கொல்லி எண்ணத்தில் என்று நாம் இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எலும்பு அரிப்பு நோய்க்கு CAL-CAREACARS, ARNICA, PLATINA போன்ற பல ஹோமியோபதி மருந்துகள் உள்ளது.

வலிமையான, ஆரோக்கியமான எதிர்கால இளைய தலைமுறையினரை உருவாக்கும் மாபெரும் பொறுப்பு நம் கைகளில்தான் உள்ளது. எலும்பு அரிப்பு நோயை கண்டறியும் சிகிச்சை முறைகள் தமிழ்நாட்டில் சென்னையிலும், திருச்சியிலும் மட்டுமே உள்ளன. எலும்பு அரிப்பு நோய் ஏற்படாமல் இருக்க மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பின்பற்றுங்கள்! வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்!